ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸ் கடந்த ஜூலை 7 -ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை வழிநடத்திய இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் பதவி விலகி பொறுப்புக்களை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஏரியல் ஹென்றியிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இதனை ஹெய்ட்டி தேர்தல் ஆணையம் நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
ஹெய்ட்டியில் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கிளாட் ஜோசப் மற்றும் ஏரியல் ஹென்றி ஆகியோர் இணைந்து பல நாட்களாக விவாதித்து வருகின்றனர். இந்தப் பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்பாட்டை அடுத்து நேற்று திங்கட்கிழமை புதிய அதிகாரிகள் பதவியேற்றனர். அத்துடன், இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக ஹெய்ட்டி பத்திரிகையான லீ நோவெலிஸ்டே (Le Nouvelliste) செய்தி வெளியிட்டுள்ளது.
படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மொய்ஸ் கையெழுத்திட்ட ஆணையில் ஹென்றி பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவியேற்கவில்லை.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் ஹெய்ட்டியில் புதிய ஜனாதிபதியாக தற்போது யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். விரைவில் தோ்தல் நடத்தப்படவுள்ளதால் புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை இடைக்காலப் பிரதமர் வசமே அதிகாரங்கள் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.